Tuesday, December 10, 2013

"நான்" யார் - சிந்திக்க வைத்தாள் ஒரு தோழி!

இந்த தலைப்பை கண்டவுடன் "இவன்" ஏதோ "தன்னை" பற்றி எழுதி வாசிக்கிற எங்கட நேரத்தை வீணடிக்க போறான் எண்டு நினைச்சு வாசிக்காமலே விட்டுட்டு போறவங்க கூட இருக்கலாம். but சத்தியமா சொல்றன், இங்க "நான்" "என்னை" பற்றி மட்டும் எழுத வரவில்லை. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின், குறிப்பாக இன்றைய என்போன்ற இளைஞர் யுவதிகள் (நீ இளைஞனா..... என்று எங்கோ ஒரு குரல் கேட்டாலும்,) தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் பற்றி, ஏன்.... இதுவரை நானே கூட அதிகம் கவலைப்படாத ஒரு விடயம் பற்றி தான் இன்கே எழுதப் போகிறேன் !

இந்த தலைப்பையும் இந்த தலைப்பையிட்டு ஒரு இரவு முழுவதும் தூக்கம் தொலைத்து சிந்திக்க வைத்ததுமான பெருமை ஒரு பெண்ணை சாரும். அந்த தோழியின் முகநூல் "நிலை இடுகை" தான் என்னை இவ்வளவு சிந்திக்கவும் இந்த இடுகையை எழுதவும் வைத்தது.



சிந்தித்து பார்த்தால் உண்மையிலேயே "நான் யார்" என்ற இந்த கேள்வியை நமக்குள் நாமேயோ அல்லது நம்முடன் பழகும் யாரிடமோ வோ  நம்மை அறியாமலோ அறிந்தோ பல முறை நிச்சயமாக கேட்டிருப்போம். உதாரணத்துக்கு... யாரவது எம்மிடம் வேறு ஒருவரிடம் ஏதாவது சொல்லும்படி சொல்லும் போது "நான் யார் அதை அவனுக்கு சொல்ல?" என்று சொல்லி இருப்போம். எதவது ஒரு சம்பவத்தை பார்க்கும்போது மனதின் ஒரு பக்கம் சொல்லும், "அங்க போய் எதவாது செய்" என்று... ஆனால் மற்ற பக்கம் "நான் யார் இதிலை தலை போட" எண்டு அசரீரி கேக்கும்.

ஆனால், உன்மையிலேயே "நான் யார்" என்று அறியும் பொருட்டோ அல்லது இந்த தோழி சொன்னது போல நம்மை இந்த உலகில் அடையாளப்படுத்தும் பொருட்டோ இந்த கேள்வியை நம்மிடம் நாம் என்றும் கேட்டிருக்கவே மாட்டோம் என்பதே உண்மை. அதை விட பெரிய உண்மை என்னவெனில் ஒரு நொடியிலோ  நிமிடத்திலோ சில மணித்தியாலங்களிலோ அல்லது ஒரு நாளிலோ கூட நம்மால் இந்த வினாவுக்கான உண்மையான விடையை கண்டு பிடிக்க முடியாது!

"நான் யார்" "என்னுடைய தனிப்பட்ட அடையாளம் என்ன" என்ற வேறுபட்ட ஆனால் ஒன்றோடு ஒன்று சம்பந்த பட்ட இந்த இரண்டு வினாக்களுக்கும் ஒரே இரவில் விடை காண முயன்று தோற்றபோது நான் நான் கண்டு பிடித்த உண்மை என்னவெனில், நம் முன்னோர்கள் சொன்னது போல "மனித மனம் ஒரு குரங்கு" என்பது மட்டுமே.

தோழி சொன்னது போலவே, "நான் யார்" என்ற கேள்விக்கு....

என்றவற்றை தவிர இன்னும் சில விடைகளாக, படித்த படிப்பின் பட்டங்கள், செய்த தொழிலின் பதவி நிலைகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் ஒட்டிகொன்டாலும்...

"என்னை அடையாளப்படுத்தும் தனித்துவம்" என்ன என்ற கேள்விக்கு நிச்சயமாக ஒரு தனித்துவமான பதிலை இந்த நிமிடம் வரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. காரணம் அந்த விடயத்தில் என் "மனம் ஒரு குரங்கு" ஆகவே இப்பொழுது வரை இருந்து வருகிறது. அதற்க்கு காரணம் காலத்தின் கோலங்களாக கூட இருக்கலாம்.

காலம் செய்த கோலங்களால் கல்வி கற்றலை விட்டு வெளியே வந்த நாள் முதல் ஒரு தனிப்பட்ட தொழிலில் என்னால் நிலைத்து நிற்க முடிந்தது இல்லை. கல்லூரி கல்வியை கடந்த பிறகு பட்டச்சான்றிதழ் தரத்திலான கணணி கல்வி ஒன்றை கற்ற போதும் எனது முதல் தொழில் ஒரு பாதுகாப்பு உத்தியோகமாகவே (security service) இருந்தது. அதன் பின்பு எதோ ஒரு தற்செயல் சந்தர்ப்பத்தில் புகைப்பட கலையகம் ஒன்றில் எடுப்பு வேலை, ஒரு நாள் வரைகலை (designing) பகுதியில் உள்ளவர் வேலைக்கு வராத முதலாளியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவசரமாக வந்த ஒரு வேலையை முகாமையாளரிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி பெற்று செய்து கொடுக்க போய் அது முதலாளிக்கு தெரிந்ததும் வரைகலை பிரிவில் வேலை.. அங்கருந்து விலகவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போது, வேறு ஒரு கலையகத்தில் அதே போன்ற ஒரு பிரிவுக்கு முகாமையாளராக சேர்ந்து கொண்டேன். நாட்டு சூழ்நிலை அங்கிருந்து வெளியேற வைத்தபோது வானொலி ஒன்றில் இரவு நேர அறிவிப்பாளர் வேலை கிடைத்தது, பின்பு தந்தையின் உந்துதலால் வெளி நாடு ஒன்றில் போய் வேலை தேடிய போது ஒரு புண்ணியவான் தனக்கு உதவியாளராக (assistant) சேர்த்துகொண்டார், அந்த நிறுவனத்தில் சேர்ந்து 15 நாட்களுக்கு பிறகுதான் நான் இணைக்கப்பட்டு இருப்பது நிதி (finance) பிரிவு என்பதே (பாடசாலை நாட்களிலேயே கணிதம் நமக்கு சுத்த சூன்யம்!) எனக்கு புரிந்தது... இதில் நான் உதவியாளர் என்றது என்ன தெரியுமா?... அந்த நிறுவனத்தின் சர்வதேச நிதி முகாமையாளருக்கு பிரத்யோக உதவியார் என்பதும் தெரிந்து கொண்டேன். எப்படியோ தட்டு தடுமாறி 2 வருடம் கழிந்ததும் ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில், அவசரமாக வேலை தேட, கிடைத்தது தொலைத்தொடர்புகள் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு அணித்தலைவர் வேலை. அங்கிருந்து நாடு திரும்பியதும் அதிஷ்டவசமாக Airtel என்கிற புதிய தொலைதொடர்பு நிறுவனத்துக்கு ஆள் எடுத்து கொண்டு இருந்ததால் அதே வேலை கிடைத்தது! ஆனால் 3 வருட முடிவில் அதே நிறுவனத்தில் 6 வெவேறு பணிகளிலும் பதவிகளிலும் இருந்து விட்டேன். இருந்தும் எதிர்பார்த்த காலத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிட்டாததால் அங்கிருந்து விலகியபொழுது கிடைத்தது "சலனப்பட தொகுப்பாளர்" (Visual / Video Editor) வேலை. அந்த நிறுவனத்திலும் மேலாளர் பதவி வரை உயர்ந்தபொழுது ஐரோப்பிய பயணம் சரிவரவும் இங்க ஓடி வந்தாச்சு! இங்க இப்ப வேலை வெட்டி இல்லாமல் குந்தி இருக்கிறன்.

இப்படி பலதரப்பட்ட தொழில் நிலைகளில் எனது திறன் திண்டாசி இருந்ததால், இண்டைக்கு இந்த வினாவுக்கு சரியான "என்னுடைய தனிப்பட்ட அடையாளத்தை" என்னாலேயே கண்டுகொள்ள முடியாது உள்ளது. இப்படி என்னை போல பலர் தவிக்கலாம். நிச்சயம் தவித்துதான் ஆக வேண்டும். அப்பத்தான் இந்த வினாக்களுக்கான விடையை கண்டு பிடிக்க முடியும்.

இப்போதைக்கு நான் சிந்தித்து சிந்தித்து கண்டு கொண்டது "எந்த வேலையாக இருந்தாலும் என் திறனை முழுவதும் ஈடுபடுத்தி, (அது கொஞ்ச நாளாக இருந்தாலும் கூட) செயற்பட்டு அடுத்த நிலைக்கு விரைவாக முன்னேற முடியுமானது" தான் எனது தனித்துவம் என்று இப்போதைக்கு நான் நினைத்தாலும், குரங்கு மனம்... வேற ஏதும் இருக்குமோ என்று சொல்லத்தான் செய்கிறது!

அதை கண்டு பிடிக்க இன்னும் சில காலம் செல்லலாம்.. ஆனால் இந்த விடயத்தை கண்டு பிடிக்க முயல ஆரம்பித்துவிட்ட காரணத்தால் நிச்சயம் விரைவில் கண்டுபிடித்துவிடுவேன் எனும் நம்பிக்கை என் மனதில் வந்துவிட்டது.

இப்படி நீங்கள் அனைவரும் நிச்சயம் உங்கள் தனிப்பட்ட அடையாளத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டால் தான் அந்த அடையாளத்தை உலகுக்கு வெளிப்படுத்த முடியும்.

காந்தியால் முடியுமானால், பாரதியால் முடியுமானால், எங்கோ ஒரு காட்டு வனாந்தர பூமியில் ஒரு பழங்குடி இனத்தில் பிறந்த நெல்சனால் முடியுமானால், தன் இனத்தையே அழித்து, தன் அடையாளத்தை உலகுக்கு காட்டிய ஹிட்லருக்கும், மனித உடலங்களை உணவாக கொண்ட இடியமீனுக்கு முடியுமானால்....

கல்தோன்றி மண்தோன்றா காலத்து மொழி பேசுவதாய்,
கறுப்பினத்தோன்றல்களின் கருவான இராவணன் வம்சம் என்றும்,
எட்டுதிசையாவும் தொட்டு அரசான்ட சோழ வழி என்றும்
சொன்னாலும் சொல்லாவிடினும் செருக்கோடு வாழும் செந்தமிழன் உன்னால முடியாதா?

தமிழன் என்று சொல்லி தனியே தலை நிமிர்வதில் இல்லை, உன் தனித்தன்மையை உலகுக்கு காட்டி முழு உலகுக்கும் முன்னால் நிமிர்ந்து சொல், இது தான் தமிழனின் தனித்துவம் என்று...



,,,, 

Sunday, December 8, 2013

நெல்சன் மண்டேலா - ஒரு போராளி !

 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்த இவர்  சோசா பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவரது தந்தை இந்த இன மக்களின் தலைவராக விளங்கியவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரது முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா' என்பதாகும். இருந்த போதும் பலராலும் "நெல்சன் மண்டேலா" என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். இவர் தனது சிறுவயதுப் பராயத்தில் குத்துச் சண்டை வீரராகவே பலராலும் அறியப் பட்டர்.

சோசா பழங்குடி இனத்திலிருந்து பாடசாலைக்கு சென்ற முதல் நபர் இவர் தான். தவிர "நெல்சன்" என்கிற இவரது பெயர் இவரது முதல் பாடசாலை ஆசிரியரால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடும் படியான விடயம். உலகின் வாழ்க்கை ஓட்டத்தில் பின்தங்கிய ஒரு குமுகத்தில் இருந்து வந்திருந்த போதும் கல்வி கற்ப்பத்தில் பெரிதும் ஆர்வம் காட்டிய இவர்  லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அதன் பின்பு,  1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார்.

மண்டேலா 1943இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைய முன்னர் ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.  அந்த காலப்பகுதியில் 'நோமதாம் சங்கர்' என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்து, மண்டேலா மீது வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு விசாரணை ஐந்தாண்டுகளாக தொடர்ந்தது! இதனிடையே 1958-ஆம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்பவரை மண்டேலா மணந்துகொண்டார். "வின்னி" தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

1939 ஆம் ஆண்டு முதல் அதாவது தனது 21 ஆவது முதல், கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, "கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது! சொந்த நாட்டுக்குள்ளேயே அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அனுமதி பெற வேண்டியுள்ளது! நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்" என அறை கூவல் விடுத்து, கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.

1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதை கண்ணுற்ற மண்டேலாவும் அவரது சட்ட கல்லூரி நண்பரான "ஒலிவர் ரம்போ"வும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலில் குதித்து மெதுவாக . கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" கட்சியின் முதன்மை பொறுப்புக்கு வந்தார்.

அக் கட்ச்சியின் தலைவர் பொறுப்புக்கு வந்த நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக பல அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற இப் போராட்டம் கண்ட பெரும் வளர்ச்சியை கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், "அரசுக்கு எதிராக புரட்சி செய்தார்" எனும் குற்றச்சாட்டின் பெயரில் இவரை கைது செய்தது. இருப்பினும் நான்காண்டுகள் விசாரணைக்குப் பின்பு, தகுந்த ஆதாரங்கள் அட்டர நிலையில், குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா முன்னை விட தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது.

1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை Sharpeville நகரில் நடாத்தினர். இவ்வூர்வலத்துக்கு எதிராக பொலிசார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரது தோழர்கள் ஏறத்தாள 150 பேரும் செய்யப்பட்ப்பட்டனர். மிக நீண்ட சட்ட போராட்டங்களின் பின், 1961 இல் அவர்கள் அனைவரும் அக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி தமக்கான உரிமைகளைப் பெற முடியாது என உணர்ந்த மண்டேலா, ஆயத ஆயுத போர் வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் தீவிரமாக முடிவு செய்தனர்.

1961-ஆம் ஆண்டு "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படை" தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பெரும் பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

1961 டிசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. இதனால் கடுப்படைந்த அரசாங்கம் கடுமையான கெடுபிடிகளை மேற்க்கொண்டதால், 1961 ம் ஆண்டிலேயே மண்டேலா தலைமறைவாகவேடிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. அவரை பிடிக்கும் பொருட்டு அரசாங்கத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்க விடயம்.

1962 ஆகஸ்ட் 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress ] தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் "ரிவோனியா செயற்பாடு" (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டது. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது என்றே சொல்லலாம். அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்த தென்னாப்பிரிக்க அரசு, அவர் தனது மனைவியைச் சந்திப்பதற்கான அனுமதியை கூட மறுத்திருந்தது. 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்ற மண்டேலா, அதன் காரணமாக வீட்டுச்சிறைக்கு (House Arest) மாற்றப்பட்டார்.

"மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும்" என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்த போதும், தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி "வின்னி" தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியபோதும் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அதிபராக பதவிக்கு வந்த "டெக்ளார்க்" மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.

மண்டெலோ தனது கோரிக்கைகள் தொடர்பாக டெக்ளார்க் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அவர்களிடம் இருந்து தனது பல கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டார். தென்னாப்பிரிக்கா ஒரு மக்களாட்சி நாடாகப் பின்னர் மலர்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் மிக முக்கிய பங்கு வகித்தன எனலாம்.

அன்றைய  தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான "பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க்" ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலாவை 11.2.1990 அன்று விடுதலை செய்வதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். 1990 இல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வை உலகம் முழுவதும் பல தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.

அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டபோது, மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறைச்சாலையிலிருந்து  இருந்து வெளியே வந்தபோது, சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

சிறைச்சாலையிலிருந்து வெலியே வந்து நேரே கேப்டவுன் நகருக்கு சென்ற மண்டேலா, அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார்.

"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்". என்பது அங்கு அவர் ஆற்றிய உரை ஆகும்.

1994ம் ஆண்டுக்கான மக்கள் ஆட்சி தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மண்டேலா, 1994 மே 10 ந் தேதி தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999 இல் பதவியை விட்டு விலகிகொண்டார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

நீண்ட போராட்டத்தின் பின், அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் மண்டேலா ஈடுபட்டார். அவற்றில் முக்கியமானது உண்மையும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக் குழுவை (Truth and Reconciliation Commission) நிறுவி பழிவாங்கலைத் தவிர்த்து உண்மையையும் நியாயத்தையும் பெறுவதற்கான ஒரு முறைமையை அதனூடாக ஏற்படுத்தியது ஆகும். உலக வரலாற்றுக்கே, ஆண்டைகள், அடிமைகள் உண்மைகளை அறிந்து மன்னித்து இணக்கமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இந்த முறைமை இப்பொழுது கருதப்படுகிறது.

உடல் நலம் குன்றிய நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி உத்தியோகபூர்வமாக அறிவித்தது. மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 ஜூன் 27-ம் தேதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது "மொசாம்பிக்" பயணத்தை இரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் அவரது பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டு, மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர். இருந்தும் துரதிஷ்டவசமாக, நெல்சன் மண்டலா 5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் இவ்வுலகை நீத்தார்.

நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய பல விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டேலா பெற்ற விருதுகளில் நான் அறிந்த சிலவற்றை இங்கே குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ள நிலையில்....

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் "வின்னி" டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.  இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றல், அது நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே.

1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும், அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர, அவரது வாழ்நாள் விருதுகளாக,....,

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.

ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், "சர் வின்ஸ்டன் சர்ச்சில்" மற்றும் "ஆபிரகாம் லிங்கன்" உருவச்சிலைகளுக்கு அருகில் நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகஸ்ட் 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் நிறுவப்பட்டது.

அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா "பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது" என்று கூறினார்.

நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்  நெல்சன் மண்டேலா, இவரை இவ்வளவு தூரம் கவுரவித்த, கவுரவிக்கின்ற உலக அரசுகளும் ஐ.நா வும், இது போன்றே இனத் துவம்சங்களுக்கும் மொழி மத வெறி கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும் போராடுபவர்களையும் இன்னமும் "பயங்கரவாத" முத்திரை குத்திக்கொண்டு தான் இருக்கின்றன என்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமே !!! :-(